நீர்கமல கண்களும்
நீலவேணிற் குரல்களும்
மாந்தளிர் மேனியும்
மட்டுமே
பெண்மையின் முழுமையும் அல்ல
மின்னும் பொன்னும்
மிளிரும் பட்டும்
அடர்த்தி ஆபரணமும்
மட்டுமே
பெண்களின் தேவையும் அல்ல
ஆடவன் காமம் சுடர்விட திரியென விருப்பம் இன்றி எரிந்தாய்,
சீர்வரிசை சிட்டையில் கடைசி பொருளாய் நீயும் இணைந்தாய்,
தெருவிலும்க்கூட மாற்றாடவரின் தொல்லை பல தாங்கினாய்,
சிறுபிள்ளை பருவத்திலும் மாராப்பை மறைத்து பலகினாய்,
பறக்கும் நேரம் அதுவாய் பிறக்காது - பெண்மயிலே
உனக்கு தோகையும் புதிதாய் இனி முளைக்காது
கங்காரு குட்டியை போல் பை அமர்த்தி கிடந்தது போதும்
துள்ளி குதி - உலகம் மிகவும் அழகானது
ஆண்களின் தாபம் தீர்க்கும் காமகுளிர்பானமா நீ,
மதிப்புகளை தொலைத்து வாழ நிரந்தர அடிமையா நீ,
கனவுகளை துறந்து குடும்பம் சுமக்கும் சுமைதாங்கியா நீ,
படுக்கையை மட்டும் பங்கிட என்றும் விலைமாதுவா நீ,
மறைக்கும் மேகம் ஒரு நிலையாய் இருக்காது - வான் நிலவே
இரவெல்லாம் என்றும் தேய்பிறை நிலைக்காது
பாடும் கிளியை போல் இரும்பு கூட்டில் இருந்தது போதும்
இறக்கை விரி - வானம் மிகவும் விசாலமானது